இந்தியா
ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி: செலவை ஏற்கும் ரிலையன்ஸ், இன்போசிஸ்!
ரிலையன்ஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு மற்றும் ஊழியர்களின் குடும்பத்தாருக்கு கொரோனா தடுப்பூசி போடும் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன.
கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் முதற்கட்டமாக, கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு, இலவசமாக செலுத்தி வருகின்றது.
கடந்த திங்கட் கிழமை முதல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதைத் தாண்டி நோயுற்று இருப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடுக்கிவிடுகிறது மத்திய அரசு.
இந்நிலையில், தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அதற்கான செலவை நிறுவனமே ஏற்கும் என்றும் ரிலையன்ஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் 6 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து மொத்தம் 19 லட்சம் பேருக்கு இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.