தமிழ்நாடு
சென்னைக்கு ரெட் அலர்ட்: அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை!
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னையில் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீபத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றியதால் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சென்னைக்கு ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னைக்கு ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை தொடரும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஏற்கனவே நேற்று இரவு எட்டு முப்பது மணி முதல் தற்போது வரை தொடர்ந்து சென்னையில் மழை பெய்து வருகிறது என்பதும் இதுவரை 20 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை கடற்கரை – எழும்பூர் ரயில் நிலையங்கள் இடையே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதை அடுத்து செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து வரும் ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சென்னை மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.