தமிழ்நாடு
சென்னை உள்பட 8 மாவட்டங்களில் ரெட் அலர்ட் வாபஸ்!
தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் ரெட்அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்றும் நேற்று முன்தினமும் ஒருசில மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சென்னை உள்பட ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின் படி சென்னை உள்பட 8 மாவட்டங்களில் ரெட்அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு ஆபத்து நீங்கியுள்ளதாகவும், இதனால் ரெட்அலர்ட் வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை.
இந்த நிலையில் ரெட்அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வெள்ள மீட்பு நடவடிக்கை, மின் விநியோகம் சீர் செய்யும் நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு சில இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்ததாகவும் மின் விநியோகம் சீர் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெள்ள நீர் வடியாததால் சென்னையில் உள்ள கலைஞர் கருணாநிதி நகர், அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், ஜாபர்கான்பேட்டை, மேற்கு சைதாப்பேட்டை, சாலிகிராமம், நெசப்பாக்கம், மேற்கு மாம்பலம், வடபழனி, அரும்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சார துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் தற்போது மிகவும் துரிதமாக வெள்ள நீர் வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் இந்த பணி முடிந்தவுடன் மின் வினியோகம் செய்யப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.