தமிழ்நாடு
உண்மையான தர்மயுத்தம் இப்போதான் தொடங்குது: அதிமுகவுக்கு டிடிவி தினகரன் நேரடி சவால்!
![TTV Dinakaran - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/06/TTV-Dinakaran.jpg)
இப்போது தான் உண்மையான தர்மயுத்தம் தொடங்குவதாகவும், அதில் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அமமுகவின் தலைமையகத்தில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் தினகரன். தொடர்ந்து அவர் நிருபர்களை சந்தித்து,
‘ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைப்பது தான் எங்களின் நோக்கம். ஜெயலலிதாவின் விசுவாசிகள் வாக்குகள் எங்களுக்குக் கிடைக்கும்.
அதிமுகவிலிருந்து சிலர், எங்கள் கட்சிக்குள் ஒரு தவறான தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, அமமுகவுக்கு அதிமுக தரப்பில் 18 இடங்கள் ஒதுக்கித் தரத் தயார் என்றும், அதை நான் தான் ஏற்க மறுக்கிறேன் என்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் வதந்தியைப் பரப்பி வருகிறார்.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இந்த வதந்தியை அவர் பரப்பி வருகிறார். அதில் எந்த வித உண்மையும் இல்லை. எங்கள் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகத் தெளிவானவர்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. மக்களின் ஆதரவு எங்களுக்குத் தான் உள்ளது. அதனால் நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவோம்.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை நாங்கள் அதர்மத்தையும் எதிர்க்கிறோம், துரோகிகளையும் எதிர்க்கிறோம். நாங்கள் தான் தர்மத்தின் பக்கம் நிற்கிறோம். இப்போது தான் உண்மையான தர்மயுத்தம் ஆரம்பமாகிறது’ என்று அதிரடியாக பேசியுள்ளார்.