தமிழ்நாடு
பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
பொதுத் தேர்வு எழுதாத 6.70 லட்சம் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 6.70 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரிய வந்தது. இதனை அடுத்து தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு பெற்றோர் மற்றும் மாணவர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
பொதுத்தேர்வில் இத்தனை லட்சம் பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் மாணவர்கள் தேர்வு எழுதாததற்கான காரணம் ஆராயப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் வருங்காலத்தில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கு தேவையான விழிப்புணர்வை பள்ளி கல்வித்துறை ஏற்படுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.
எனவே தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.