இந்தியா
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. கடன் வாங்கியவர்கள் அதிர்ச்சி!
2022-2023 நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் நடைபெற்றது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. எனவே ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படலாம். ஆனால் பொருளாதார வளர்ச்சியை வைத்து பார்க்கும் போது ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படாமலும் போகலாம். வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் அப்படியே தொடரலாம் எனவும் கணிக்கப்பட்டு இருந்தது. இதை பூமி டுடே தளத்திலும் முன்னதாக குறிப்பிட்டு இருந்தோம்.
அதை உறுதி செய்யும் விதமாக இன்று நாணய கொள்கை கூட்ட அறிவிப்பை வெளியிட்ட, ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை என அறிவித்துள்ளார்.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லாததால் ஆர்பிஐயிடம் இருந்து வங்கிகள் பெரும் கடனுக்கு 4 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.
அதுவே வங்கிகளிடம் இருந்து ஆர்பிஐ பெரும் கடன்களுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 0.40 சதவீதம் உயர்த்தப்பட்டு 3.7 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறையும். பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட வங்கி சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகித லாபமும் குறையும்.
அதுவே ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால், கடன் திட்டங்கள் மீதான வட்டி உயரும். பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களில் அதிக லாபம் கிடைக்கும்.
மேலும் நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 4.5 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து பொருளாதாரம் மீண்டு வந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலால் பணவீக்கம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. அந்நிய செலாவணி தேவைக்கு ஏற்றவாறு சரிசமமாக உள்ளது எனவும் சக்திகாந்ததாஸ் தெரிவித்தார்.