இந்தியா
ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர்வு.. யாருக்கெல்லாம் திண்டாட்டம்.. யாருக்கு கொண்டாட்டம்?
இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த ஒரே ஆண்டில் 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.25% என உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் 0.25% உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கான குறுகிய கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் தற்போது 6.25 சதவீதம் என இருக்கும் நிலையில் இனி 6.50 சதவீதம் என உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் வங்கிகளில் கடன் வாங்கிய குறிப்பாக இருசக்கர, நான்கு சக்கர, வீட்டு லோன் வாங்கி வருவதற்கு வட்டி விகிதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது, அல்லது தவணை மாதங்கள் அதிகரிக்கும். ஆனால் அதே நேரத்தில் வங்கியில் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடு செய்தவர்களுக்கு வட்டி விகிதம் அதிகம் கிடைக்கும் என்பதால் அவர்களுக்கு லாபம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பண வீக்கம் குறைய தொடங்கும் நேரத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கி பணம் வீக்கத்தினை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருகிறது. அமெரிக்காவில் பெடரல் வங்கி வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு ஒரு சில வாரங்களில் இந்தியாவிலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டிலிருந்து வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருவது தொடர் கதை ஆகி இருக்கும் நிலையில் மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்படுமா அல்லது இத்துடன் நிறுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வட்டி விகித உயர்வு காரணமாக பர்சனல் லோன் உள்ளிட்ட கடன் வாங்கியவர்களுக்கு திண்டாட்டம் என்றும் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடு செய்தவர்களுக்கு கொண்டாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.