செய்திகள்
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை… வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி….
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று காலை குடியரசு தினவிழா நடந்தது. இதில், ரிசவர் வங்கி ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்த பின் நிறைவாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி ஊழியர்கள் யாரும் எழுந்து நின்று மரியாதை செய்யவில்லை. ஏன் இப்படி செய்கிறீர்கள்? என செய்தியாளர்களிடம் அவர்கள் கேட்டதற்கு தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. எழுந்து நிற்க தேவையில்லை என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது என அவர்கள் செய்திகாளர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், கனிமொழி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இதை வன்மையாக கண்டித்தனர். மேலும், சில அரசியல் கட்சிகள் அந்த அதிகாரிகளுக்கு எதிராக போராட்டத்தையும் துவக்கினர்.
இந்நிலையில், அந்த அதிகாரிகளின் செயலுக்கு ரிசர்வ் வங்கி தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் எஸ்.எம்.சாமி தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து தனது வருத்தத்தை தெரிவித்தார். மேலும், இது தொடர்பான ஒரு விரிவான அறிக்கை ரிசர்வ் வங்கி சார்பில் இன்று மாலை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.