தமிழ்நாடு
மக்களவையில் பாதியிலேயே முடிக்கப்பட்ட ரவீந்திரநாத் குமாரின் பேச்சு!
![OP Raveendranath - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/06/OP-Raveendranath.jpg)
மக்களவையில் நேற்று தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் பதிலளித்தார். இவரது பேச்சு பாதியிலேயே முடிக்கப்பட்டது.
மக்களவையில் நேற்று திமுக எம்பி தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பேசினர். அப்போது அவர்கள் அதிமுக அரசை மிக கடுமையாக விமர்சித்தனர். தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு ஊழல் மிகுந்த அரசாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். மேலும் மக்களுக்கு தண்ணீரை விநியோகிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து திமுக எம்பிக்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த அதிமுக எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார், பருவமழை பொய்த்ததும், நீர் ஆதாரங்கள் வற்றியதும்தான் தண்ணீர் பாற்றாக்குறைக்கான முக்கிய காரணம். திமுக தமிழக அரசின் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது. தற்போதைய தண்ணீர் பிரச்சினையை சமாளிக்கவும், எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கான தரவுகள் என்னிடத்தில் உள்ளன. அவர்கள் விரும்பினால் வழங்குவதற்கு தயாராக உள்ளேன். படித்துபார்த்துவிட்டு அவர்களுக்கு சொந்தமான ஊடகங்களில் ஒளிபரப்பட்டும். அவர்களுக்கு ஊடகங்களின் ஆதரவும் உள்ளது. நான் வழங்கும் ஆதாரங்களில் எந்தத் தகவலையும் மறைக்காமல் ஒளிபரப்ப வேண்டும் என்றார். தொடர்ந்து ரவீந்திரநாத் பேச முயன்றபோது அவையில் கூச்சல் குழப்பங்கள் ஏற்படவே அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார், இதையடுத்து ரவீந்திரநாத் குமாரின் பேச்சு பாதியிலேயே முடிக்கப்பட்டது.