செய்திகள்
போட்டியிட ஆளே இல்லை.. கட்சி எதுக்கு?… நிர்வாகிகள் கூட்டத்தில் ராமதாஸ் ஆவேசம்…
தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்று பாட்டாளி மக்கள் கட்சி. இதன் நிறுவனராக டாக்டர் ராமதாஸ் இருக்கிறார். அவரும் அவரின் மகன் அன்புமணி ராமதாஸும் கட்சிக்கு தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர். கட்சி துவங்கியது முதலே அதிமுக அல்லது திமுக என ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து இக்கட்சி தேர்தலை சந்தித்து வந்தது. திடீரென சில வருடங்களுக்கு முன்பு இனிமேல் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அதிரடியாக அறிவித்தனர். அதன்பின் ஒரு தேர்தலில் தனியாகவும் போட்டியிட்டனர். ஆனால், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
எனவே, கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் அதிமுகவோடு கூட்டணி அமைத்து பாமக போட்டியிட்டது. ஆனாலும், பெரிய வெற்றிகள் இல்லை. அவர்கள் நம்பும் குறிப்பிட்ட சாதி மக்களின் ஓட்டுக்களே அவர்களுக்கு விழவில்லை.
இந்நிலையில், கட்சியின் எதிர்காலம் பற்றி விவாதிப்பதற்கான கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பாமக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய ராமதாஸ் ‘ உள்ளாட்சி தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டு வைத்து பாமகவினர் விலை போனதால் தேர்தலில் போட்டியிட கூட ஆட்கள் இல்லை. இனி கட்சி நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. மூன்றாவது பெரிய கட்சி என சொல்லும் நாம், தமிழ்நாட்டில் போட்டியிடவே ஆளில்லை எனக்கூறுவது வெட்கக்கேடு’ என ஆவேசமாக பேசியுள்ளார்.
சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை வைத்து பாமகவினர் ஏற்படுத்திய சர்ச்சை இன்னும் ஓயவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.