இந்தியா
ராம நவமி வன்முறை… ஆயுதங்களுடன் சென்ற பாஜகவினர்: போட்டுத்தாக்கும் மம்தா பானர்ஜி!
மேற்கு வங்கம் மாநிலத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை வெடித்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து வன்முறை ஏற்பட்ட பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.
ஹவுரா மற்றும் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள ரிஷிரா, செராம்பூர் பகுதிகளில் ராம நவமி ஊர்வலத்தின் போது வன்முறை ஏற்பட்டது. இதனை பார்வையிட மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் மற்றும் பாஜக எம்பி ஜோதிர்மயி சிங் மஹாட்டோ ஆகியோர் அந்த பகுதிக்கு செல்ல முயன்றனர். ஆனால் தடை உத்தரவை காரணம் காட்டி அவர்களை காவல்துறை அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் இது குறித்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ராம நவமி ஊர்வலங்கள் ஏன் ஐந்து நாட்கள் நடக்கிறது. ராம நவமி கொண்டாட்டத்தின் போது நீங்கள் பல பேரணிகளை நடத்தலாம். ஆனால் பேரணியில் உங்களுடன் ஆயுதங்களை எடுத்து செல்ல வேண்டாம். பாஜகவினர் வேண்டுமென்றே அனுமதியின்றி ஊர்வலங்கள் என்ற பெயரில் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிக்கு செல்கின்றனர். ரிஷிராவில் ஆயுதங்களுடன் பாஜகவினர் பேரணி நடத்தினார்கள் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.