தமிழ்நாடு
தமிழகத்தில் 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு!
தமிழகத்தில் ஏற்கனவே மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக இருந்த நிலையில் அவற்றில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு அதில் திமுக வேட்பாளர் எம்எம் அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது அதிமுகவின் வைத்திலிங்கம் மற்றும் கேபி முனுசாமி ஆகிய இருவரும் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏக்கள் ஆக வெற்றி பெற்றதை அடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது இந்த இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் இந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டு வருகின்றனர்.
திமுக கூட்டணிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் உறுதி என்றாலும் இன்னொரு மாநிலங்களவை உறுப்பினர் அதிமுகவுக்கு சேருமா? அல்லது அதையும் திமுகவே கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட செப்டம்பர் 22ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், செப்டம்பர் 27ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி தேதி என்றும், தேவைப்பட்டால் அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.