சினிமா செய்திகள்
ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது ஏஜிஎஸ் இல்லையா? திடீர் மாற்றம் ஏன்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது
இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ஆனால் தயாரிப்பில் தான் மாற்றம் உள்ளது என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன
தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு பதிலாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே மீண்டும் ரஜினிகாந்த் படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தயாரித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு செலவு மிக அதிகமாகி விட்டதாக தெரிகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு மற்றும் ரஜினியின் உடல் நலம் ஆகியவை காரணமாக படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை என்பதால் இந்த படத்தின் பட்ஜெட் மிக அதிகம் ஆகி விட்டதாகவும், அதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது
இதனை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து கொடுக்க ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாகவும், அதன் காரணமாகவே ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே இந்த தகவல் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.