தமிழ்நாடு
அதிமுக தலைவராகிறாரா ரஜினிகாந்த்? அரசியலில் பரபரப்பு!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவையும், அவர் விட்டுச்சென்ற ஆட்சியையும் தங்களுக்கு ஏற்றார் போல ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது பாஜக என்ற கருத்து பொதுவாக அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. அதே நேரத்தில் அரசியலுக்கு வர உள்ளதாக சொல்லிக்கொண்டிருக்கும் ரஜினிகாந்தும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டிலேயே உள்ளார்.
இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமாரிடம், அதிமுக தலைவராக நடிகர் ரஜினிகாந்தை ஆக்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டுவருவதாகக் கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது. இது தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதற்கு பதிலளித்த அமைச்சர், தங்களது கற்பனைக்கு ஏற்றார்போல ஒவ்வொருவரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதிமுக என்பது ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்டுள்ள மாபெரும் இயக்கம். ஜெயலலிதா சொன்னது போல அவருக்குப் பிறகு நூறாண்டுகள் வரை கட்சியும் ஆட்சியும் இருக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவினர் எண்ணம். அதனடிப்படையில் அதிமுகவினர் ஒற்றுமையாகச் செயல்பட்டு வரும் நிலையில் அதற்கான அவசியம் எங்களுக்கு ஒரு காலத்திலும் ஏற்படாது என்று மறுப்பு தெரிவித்தார்.
ஆனால் வேலூர் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவு சென்றிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.