தமிழ்நாடு
பாஜக, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் ரஜினி: திருமாவளவன் பரபரப்பு பேட்டி!
![Rajini 7 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/04/Rajini-7.jpg)
மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளன. ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். தேசிய கட்சியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முன்னரே வெளியிட்ட நிலையில் மற்றொரு தேசிய கட்சியான பாஜகவும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு குறித்த வாக்குறுதி உள்ளது. இதனையடுத்து பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தியாவிலுள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு குறித்தும், அதற்கென தனி ஆணையத்தை உருவாக்குவோம் எனவும் வாக்குறுதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறினார் ரஜினிகாந்த்.
ரஜினியின் இந்த பாஜக ஆதரவு கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினகாந்த் பாராட்டியதில் ஆச்சரியமோ வியப்போ இல்லை. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் ரஜினி இயங்குகிறார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ரஜினியின் நிலைப்பாடு மக்களிடையே வெளிப்பட்டதில் மகிழ்ச்சிதான் என தெரிவித்தார் திருமாவளவன்.