சினிமா
சசிகுமாருக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு வெற்றிப்படம் – அயோத்தி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!
இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த அயோத்தி திரைப்படம் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நல்ல படம் என பாராட்டப்பட்டாலும் அப்போது தியேட்டருக்கு சென்று பலரும் இந்த படத்தை பார்க்கவில்லை.
ஆனால், சினிமா ரசிகர்கள் தங்கள் ஆதரவை முழுவதுமாக அயோத்தி படத்துக்கு கொடுத்தனர். இந்நிலையில், சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் அயோத்தி படம் வெளியான நிலையில், ஓடிடியில் பார்த்து விட்டு பலரும் சசிகுமாரையும் அயோத்தி படத்தையும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று அயோத்தி படம் அருமையான படம் என பாராட்டி உள்ளார். சமீபத்தில், வெற்றிமாறனின் விடுதலை படத்தை பார்த்து விட்டு பாராட்டி இருந்தார்.
தற்போது, ”அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!” என பதிவிட்டுள்ளார்.
பேட்ட படத்தில் மாலிக்காக நடித்த சசிகுமாருக்கு பேட்ட வேலனின் வாழ்த்துக்கள் இது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சமீப காலமாக சசிகுமார் ஒரு டஜன் படத்துக்கு மேல் நடித்தும் ஒன்றும் உருப்படியாக ஓடாத நிலையில், கடைசியாக வெளியான அயோத்தி படம் ஹிட் அடித்திருப்பதை சரியாக ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருக்கிறார் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.
படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்தி ரஜினிகாந்தின் இந்த ட்வீட்டை பார்த்த நிலையில், ”உலகில் உள்ள அத்தனை விருதுகளும் ஒரு நொடியில் கிடைத்த மகிழ்ச்சியையும் ,உத்வேகத்தையும் தருகிறது தங்களின் பாராட்டுகள்…நன்றி sir” என நன்றி தெரிவித்துள்ளார். நல்லவேளை நேரடியாக ரஜினிகாந்தை சந்தித்து கூனிக் குறுகி உட்கார்ந்து விட்டால் வெற்றிமாறனை போல இவரையும் நெட்டிசன்கள் விமர்சித்து இருப்பார்கள். எல்லாத்தையும் இனி ட்வீட்டோடவே நிறுத்திக் கொள்வது நலம் என கலாய்த்து வருகின்றனர்.
“நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் #அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார்” என சசிகுமார் நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.