தமிழ்நாடு
‘கட்சி மட்டும் தொடங்கு தெய்வமே.. நாங்க பாத்துக்கிறோம்’ ரஜினி வீட்டு முன்பு ரசிகர்கள் தர்ணா
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்ததையடுத்து, போயஸ் இல்லத்தில் உள்ள அவரது வீட்டின் முன் ரசிகர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இரத்த அழுத்த மாறுபாட்டால் சிகிச்சை பெற்று, குணமாகி வந்த ரஜினிகாந்த் நேற்று (டிச. 29) உருக்கமான ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் உடல்நலம் கருதி, அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை, தமிழக மக்களும் ரசிகர்களும் என்னை மன்னியுங்கள் என்று தெரிவித்திருந்தார்.
ரஜினியின் இந்த முடிவை அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ரஜினி ரசிகர்களோ பேரதிர்ச்சி அடைந்தனர். ரஜினி அரசியலுக்கு வருவார், அரசியலுக்கு வருவார் என்று பல ஆண்டுகளாக காத்திருந்தோருக்கு ரஜினியின் இந்த அறிவிப்பு விரக்தியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து போயஸ் இல்லத்தில் உள்ள ரஜினியின் வீட்டு முன்பு அவரது ரசிகர்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். உங்களை அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டோம், அரசியலுக்கு வாருங்கள், கட்சி தொடங்குங்கள் என்று முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.