தமிழ்நாடு

Breaking: இன்று மாலை ரஜினி டிஸ்சார்ஜ்.. என்ன சொன்னார்கள் மருத்துவர்கள்!

Published

on

உடல்நலக் குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இது குறித்து அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது.

ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார் ரஜினி. படப்பிடிப்பு குழுவில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரஜினிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது. இருப்பினும் அவருக்கு வேறு சில பிரச்சனைகளால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. குறிப்பாக ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஐதராபாத்தில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படவிருக்கிறார்.

இது குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ரஜினிகாந்த், கடந்த 25 ஆம் தேதி மிகுந்த ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு, மருத்துவக் குழு மூலம் சிகிச்சைப் பெற்று வந்தார். தற்போது அவரின் ரத்த அழுத்தம் சீராகி, நன்றாக உணர்கிறார். இதைத் தொடர்ந்து அவர் மருத்துமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருக்கிறார்.

மருந்து மற்றும் முறையான உணவைத் தவிர்த்து அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள்:

1.ஒரு வாரத்துக்கு முழு ரெஸ்டில் இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும்.

2.மிகக் குறைந்த உடல் ரீதியான உழைப்பே செய்ய வேண்டும். மற்றும் மன அழுத்தமில்லாமல் இருக்க வேண்டும்.

அவரின் உடல்நிலை காரணமாக, கோவிட்-19 தொற்று ஏற்படும் வகையிலான எந்தவித செயலிலும் ஈடுபடக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று விளக்கமாக ரஜினியின் உடல்நிலை பற்றி கூறப்பட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:

Trending

Exit mobile version