சினிமா
அந்த இயக்குனருடன் இணையும் ரஜினி?… அப்ப ஹிட் கன்ஃபார்ம்……
![rajinikanth - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/rajinikanth.jpg)
ரஜினியின் நடிப்பில் உருவான அண்ணாத்த தீபாவளிக்கு வெளியானது. அவரின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பாராஜ், நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், பாண்டிராஜ் என பட்டியல் நீண்டது. சந்திரமுகி போல் மீண்டும் ஒரு மாஸ் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும். சிறந்த கதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் எனக் கூறப்பட்டது. எனவே, அவர் கே.எஸ்.ரவிக்குமார் பக்கம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. பாலிவுட் பட இயக்குனர் பால்கி பெயரும் அடிபட்டது. ஆனால் இதுவரை எதுவும் உறுதியாகவில்லை.
அதேநேரம், கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியவரும் தற்போது விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வருபவருமான நெல்சன் திலீப்குமார் ரஜினியின் புதிய படத்தை இயக்கும் பேச்சுவார்த்தை தற்போது துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஏற்கனவே பீஸ்ட் படம் துவங்கும் முன்பே நெல்சனுக்கு இந்த வாய்ப்பு வந்தது. ஆனால், சில காரணங்களால் அவரால் இதை ஏற்கமுடியவில்லை. தற்போது பீஸ்ட் படம் முடிவடையும் நிலையில் இருப்பதால் இந்த பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கியுள்ளதாக கூறப்பட்டது.
தற்போது இந்த செய்தி ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் எனவும், இப்படத்திற்கும் அனிருத்தே இசையமைப்பார் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கும் எனவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. எனவே, டிவிட்டரில் #Thalaivar169 என்கிற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.