தமிழ்நாடு
‘4 ஆம் தேதி வரை சில பணிகளை சிறப்பா செய்யணும்!’- பணப்பட்டுவாடா குறித்து ராஜேந்திர பாலாஜி ஓப்பன் டாக்
தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. களத்தில் இருக்கும் இரண்டுப் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டுள்ளன.
குறிப்பாக இரண்டு நாட்களுக்கு முன்னர் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சேலத்தில் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். இன்று தாராபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரச்சாரம் செய்துள்ளார். இப்படி பிரச்சாரங்கள் ஒரு பக்கம் தீவிரமடைந்து வரும் அதே வேளையில் பணப் பட்டுவாடா குறித்தப் புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ‘மக்கள் நமக்கு வாக்குச் செலுத்த தயாராக உள்ளார்கள். அதை கொண்டு வந்து சேர்க்க வேண்டியது நமது பொறுப்பு.
இன்று தொடங்கி வரும் 4 ஆம் தேதி வரை சில பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அமைச்சர், பணப் பட்டுவாடா செய்வதைத் தான் இப்படி சூசகமாக பேசியுள்ளார் என்று அரசியத் தளத்தில் சலசலக்கப்படுகிறது.