தமிழ்நாடு
ராஜேந்திர பாலாஜி, பாஜகவில் இணைகின்றாரா? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லி சென்று இருப்பதாகவும் அவர் பாஜகவின் முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதனை அடுத்து அவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
அதற்கேற்றார்போல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ’ராஜேந்திரபாலாஜி பாஜகவில் இணைந்தால் அவரை வரவேற்போம் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’ராஜேந்திர பாலாஜி அவர்கள் எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் உள்ளார். அதிமுகவின் கொள்கைகளில் மிகுந்த பற்று உடையவர். எனவே அவர் பாஜகவில் சேர இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் 100% பொய்யானது. அவர் தற்போது வரை அதிமுகவில் தான் இருக்கிறார் என்று கூறினார்.
ராஜேந்திர பாலாஜி வந்தால் வரவேற்போம் என அண்ணாமலை கூறியது குறித்து கருத்து கூறிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’எந்த கட்சியில் இருந்து எந்த ஒரு கட்சிக்கு மாறினாலும் அவர்கள் வரவேற்கத்தான் செய்வார்கள், இதில் எந்த ஒரு தவறும் இல்லை என்று கூறினார்.
இந்த நிலையில் டெல்லி வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின்படி ராஜேந்திரபாலாஜி பாஜகவில் சேருவது உறுதி என்றும், இன்னும் ஓரிரு நாளில் இது குறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.