தமிழ்நாடு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி கிடுக்குபிடி!
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணையின் நிலை என்ன என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் ராஜேந்திர பாலாஜி முறைகேடாக வாங்கிய சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு உத்தரவுட வலியுறுத்தியிருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையில் ஐபிஎஸ் அதிகாரி அந்தஸ்தில் உள்ள எஸ்பி தலைமையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கடந்த வருடம் ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர், விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதற்கு நான்கு மாதங்கள் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
ஆனால் இந்த வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வருவதால் அரசு தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணையின் நிலை என்ன என்பது குறித்து வரும் ஜூலை 25-ஆம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.