தமிழ்நாடு
கல்லாபெட்டி சிங்காரம் எடப்பாடி பழனிசாமி: ராஜகண்ணப்பன் பொளேர் பேட்டி!
![Raja Kannappan - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/03/Raja-Kannappan.jpg)
அதிமுக தலைமை மற்றும் அதன் கூட்டணி மீது அதிருப்தி காரணமாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி பேட்டி அளித்துள்ளார். அதில் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் அதிமுகவில் இருந்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டியளித்தார். அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்களை மதிக்காத இபிஎஸ், ஓபிஎஸ் கீழ் பணியாற்ற முடியாது என்றார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், கல்லாபெட்டி சிங்காரம் யார் என்று கேட்டால் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் உட்கட்சிப்பூசல் நிறைய உள்ளது, முக்கியமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே இருக்கிறது. பாஜகவுக்கு கொத்தடிமையாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உள்ளது. பாஜகவின் பேச்சை கேட்டு கட்சியை அடகு வைத்துவிட்டார்கள்.
மகனுக்கு சீட் வாங்க 10 தொகுதிகளை தாரை வார்த்துள்ளார் ஓபிஎஸ். அதிமுகவில் ஆளுமை உள்ள தலைவர்கள் யாரும் இல்லை. அதிமுகவை வழிநடத்த ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு எந்த தகுதியும் இல்லை என்றார். மேலும் திமுக கூட்டணியை ஆதரித்து நாளை முதல் பிரச்சாரம் போக உள்ளதாக தெரிவித்த அவர் 18 சட்டசபை தொகுதிகளில் திமுக வென்றால் அதிமுக ஆட்சியே இருக்காது என்றார்.