தமிழ்நாடு
இன்று 9 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்னும் சில நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை காரணமாக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற்று வருவதை அடுத்து தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று நெல்லை குமரி தூத்துக்குடி ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், திருவள்ளூர் பெரம்பலூர் கடலூர் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று பலத்த காற்று வீசும் என்பதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் அதனால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
நேற்று தீபாவளி அன்று கன்னியாகுமரி, கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது