தமிழ்நாடு
இன்று முதல் 5 நாட்களுக்கு மீண்டும் மழை: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் இதனால் ஏராளமான சேதம் ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் டிசம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து படிப்படியாக மழை குறைந்து வருகிறது என்பதும் இதனால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வட கிழக்கு பருவ காற்று காரணமாக இன்று அதாவது டிசம்பர் 14ஆம் தேதி முதல் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் ஏனைய ஒருசில மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும் என்றும் 17ஆம் தேதி தென்மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்யும் என்றும் புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று காலை எட்டரை மணி வரை சென்னை, செம்மஞ்சேரி, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஐந்து சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் சென்னை நந்தனம் பகுதியில் நான்கு சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.