தமிழ்நாடு
Rain Update: தமிழகத்தில் ஜனவரி 12 வரை பரவலான மழை இருக்கு மக்களே!
தமிழகத்தில் இந்த முறை ஜனவரி 12 ஆம் தேதி வரை, வடகிழக்குப் பருவமழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வ மையம்.
இன்று சென்னையில் செந்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல இயக்குநர் புவியரசன், ‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், வட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாளை தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம். ஏனைய கடலோர மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தேனி, கோயம்புத்தூர், விழுப்புரம் மாவட்டங்களில் இடி மின்னிலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்த வரையில் வானம், மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவாரூரின் திருத்துறைப்பூண்டியிலும், நாகப்பட்டினத்தின் தலைஞாயிறுவிலும் தலா 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
ஜனவரி மாதத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்துள்ளது. குளிர் கால வெப்பநிலையும் இந்த ஆண்டு சென்ற ஆண்டை விட குறைந்துள்ளது. வரும் 12 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும். மழை காலம் தொடர்ந்து அதிகரித்து வருவதனால், குளிர்காலம் குறைந்துவிடும். ஜனவரி 15 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பொதுவான வெப்பநிலை உயரத் தொடங்கும்’ என்று தெரிவித்துள்ளார்.