தமிழ்நாடு
தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு… மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னை!
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி உடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்த வரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகருக்குள்ளும் புறநகர்ப் பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உண்டு. குமரிக்கடல் பகுதியில் பலமான காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.