தமிழ்நாடு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை: இன்றே தொடங்கியது!
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலி ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் இன்றே கனமழை தொடங்கியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் எதிர்வரும், 2 நாட்களுக்கு, வெப்பசலனம் காரணமாக உள்மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35 கிமீ முதல், 45 கிகிமீ வரை வீச வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல், கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை நகர் பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம், குழித்துறை, கோதையாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அரியலூர் நகர், வாலாஜா நகரம், சிறுகளத்தூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. ராஜபாளையத்தில் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.