தமிழ்நாடு

சென்னையில் இடி மின்னலுடன் மழை: 2 மணி நேரம் நீடிக்கும் என தகவல்!

Published

on

சென்னையின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருவதையடுத்து இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் இன்று காலை திடீரென சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

சென்னை முக்கிய பகுதிகளான தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, தி நகர், பெரம்பூர், ஆவடி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இன்னும் இரண்டு மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending

Exit mobile version