தமிழ்நாடு
சென்னையில் தொடர் மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
அசானி புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று மிதமான மழை பெய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மேலும் தொடர் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார் .
தென்கிழக்கு வங்க கடலில் அசானி புயல் உருவாகி உள்ளதை அடுத்து ஆந்திரா ஒரிசா மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வந்தது என்பதும் குறிப்பாக சென்னையில் இன்று அதிகாலை முதல் பல இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் வட ஆந்திர கடற்கரையோரம் அசானி புயல் கரையை கடக்கும் போது சென்னைக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் அந்த மழை இரண்டு நாட்கள் தொடரும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார் .
எனவே சென்னை மக்கள் இன்னும் இரண்டு நாட்களுக்கு குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையை அனுபவித்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அக்னி நட்சத்திர நேரத்தில் சென்னையில் மழை பெய்யும் என்ற தகவலால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.