தமிழ்நாடு
சென்னையில் விடியவிடிய மழை: இன்றும் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
![rain roads - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/rain-roads.jpg)
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்த நிலையில் இன்றும் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை சென்னையில் உள்ள தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, திநகர், எழும்பூர், மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. சென்னையில் இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக இன்று காலை சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்ததால் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அடுத்த மூன்று நாட்களில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல், ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 31ம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.