தமிழ்நாடு
சென்னையில் மீண்டும் புரட்டி எடுக்கும் கனமழை: வீட்டை விட்டு வெளியேறாத பொதுமக்கள்!
![rains chennai - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/rains-chennai.jpg)
சென்னையில் மீண்டும் கனமழை புரட்டி எடுப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழலில் உள்ளனர்.
வங்கக்கடலில் தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியிருக்கும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நேற்று இரவு முழுக்க முழுக்க கனமழை பெய்ததை அடுத்து இன்று காலை ஓரளவுக்கு மழை குறைந்து இருந்தது. இந்த நிலையில் திடீரென பிற்பகலில் மீண்டும் சென்னையில் கனமழை பெய்ய ஆரம்பித்துள்ளது. கனமழை காரணமாக ஏற்கனவே தேங்கியிருந்த தண்ணீருடன் மழைநீரும் சேர்ந்து கொள்வதால் ஒரு சில பகுதிகளில் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மிக தீவிர மழையை ஏற்படுத்தும் என்றும் இதனால் சென்னையில் மழை பெய்ய தொடங்கி உள்ளது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையின் முக்கிய பகுதிகளான கோயம்பேடு, வடபழனி, எழும்பூர், அண்ணா சாலை, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் தற்போது தீவிர மழை பெய்து வருகிறது.
மேலும் ஈக்காட்டுத்தாங்கல், சோழபுரம், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, கோடம்பாக்கம், நசரத்பேட்டை, மீனம்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல் ஆவடி, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், போரூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,000 கன அடி தண்ணீர் வெளியேறி வருவதாகவும் பூண்டி மற்றும் புழல் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியே வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.