தமிழ்நாடு
நள்ளிரவு வரை தொடர்ந்த மழை: மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கும்!
சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. இந்த மழையானது இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
வெப்பச் சலனம் காரணமாக நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. விழுப்புரம், ஈரோடு, திண்டிவனம், தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அடையாறு, வேளச்சேரி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தனிப்பட்ட முறையில் வானிலை குறித்த தகவல்களை தெரிவிக்கும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது டுவிட்டர் பக்கத்தில், காற்று பலமாக வீசும். தூறலைத் தொடர்ந்து 20 முதல் 30 நிமிடங்களுக்கு மழை பெய்யும். மழை தற்போது தெற்குப் புறநகர் பகுதிகளான ஓஎம்ஆர், ஈசிஆருக்குத் திரும்பியுள்ளது. பிரதான புயல் கடலைக் கடந்துவிட்டது. இதனால், நகர்ப்புறங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என பதிவிட்டுள்ளார்.