தமிழ்நாடு
2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே டிக்கெட்: புறநகர் ரயில் பயணத்திற்கு நிபந்தனை
2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே புறநகர் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்பவர்கள் 2 டோஸ் தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை சமீபத்தில் ரயில்வேத்துறை அறிவித்திருந்த நிலையில் இந்த கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளதால் ரயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தினசரி பயணம் செய்ய டிக்கெட் எடுக்கும் போதோ அல்லது மாதாந்திர பயணத்திற்கான பாஸ் எடுக்கும்போதோ இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பித்தால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தவித கால அவகாசம் தராமல் திடீரென 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே டிக்கெட் என கூறுவது எந்த வகையில் நியாயம் என பயணிகள் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்க வேண்டும் என்றும் இரண்டாம் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு உரிய காலம் வராதவர்கள் ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் மத்தியில் கருத்து கூறப்பட்டு வருகிறது.
ஆனால் ரயில்வே நிர்வாகம் அதிரடியாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என்று கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.