தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.50: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Published

on

ரயில் நிலையங்களில் கூட்டத்தை குறைக்கும் வகையில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ஒரு சில ரயில் நிலையங்களுக்கு மட்டும் உயர்த்தப்படும் என சமீபத்தில் ரயில்வே துறை அறிவித்திருந்தது. தற்போது 10 ரூபாய் என இருக்கும் பிளாட்பார கட்டணம் ஒரு சில ரயில் நிலையங்களில் மட்டும் 50 ரூபாய் ஆக மாற்றப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்பட 6 ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் 50 ரூபாய் என ரயில்வே நிலையம் நிர்ணயம் செய்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில் பயணிகளிடமிருந்து வரும் தொடர் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் நடைமேடை (பிளாட்பார்ம்) டிக்கெட்களை உயர்த்த தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அனுமதித்துள்ளது.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச்23-ம் தேதி முதல் நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. தற்போது, சென்னை ரயில்வே கோட்டத்தில் நேற்று முதல் 6 முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ரயில்நிலையங்களில் மட்டும் நடைமேடை டிக்கெட்கள் வழங்க அனுமதித்துள்ளது.

டிக்கெட் கட்டணம் ஒரு பயணிக்கு ரூ.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கட்டணம் ஓர் தற்காலிக நடவடிக்கையாகும். இது பயணிகளின் பாதுகாப்புக்காகவும், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகவும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை. இந்த கட்டண உயர்வு மே 17-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரயில்வே பயணிகளுக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version