தமிழ்நாடு
தமிழகத்திற்கு இன்று ராகுல்காந்தி வருகை: முக ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பிரச்சாரம்!
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திப்பதற்காக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.
மாநில தலைவர்கள் மட்டுமின்றி தேசிய தலைவர்களும் அவ்வப்போது தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியைப் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தமிழகம் வர உள்ளார்.
தமிழகத்தில் இன்று காலை 11 மணிக்கு வரும் அவர் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அதன் பின்னர் சேலம் அருகே சீலநாயக்கன்பட்டி என்ற பகுதியில் நடைபெறும் திமுக கூட்டணி கட்சிகளின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, முக ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பாஜக தலைவர்களான ஸ்மிருதி இரானி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல தலைவர்கள் தமிழகத்தை நோக்கி ஒரு பக்கம் வந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தியும் இன்று பிரசாரத்திற்கு வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.