இந்தியா
ரிசர்வ் வங்கியில் இருந்து பணத்தை திருடுவது தீர்வாகாது: மத்திய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!
ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ரிசர்வ் வங்கியில் இருந்து பணத்தை திருடுவது என கூறியுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியானது தனது உபரி நிதியில் அரசின் பங்காக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இது தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது 3.6 லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து அரசாங்கத்துக்குக் கொடுக்குமாறு பாஜக தலைமையிலான மத்திய அரசு நெருக்கடி கொடுத்தது. அப்படிச் செய்தால் ரிசர்வ் வங்கியின் தற்போதைய AAA என்ற ரேட்டிங் குறைந்துவிடும். அதனால் இந்தியா பெறும் கடன்களின் மதிப்பு அதிகமாகி சுமை ஏறிவிடும். அது இந்திய பொருளாதாரத்துக்குக் கேடாக முடியும் எனக் கூறி அவர் மறுத்துவிட்டார்.
அதன் பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக வந்த உர்ஜித் படேலும் மோடி அரசின் நிர்ப்பந்தத்துக்குப் பணிய மறுத்து இரண்டு ஆண்டுகளிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார். இது அப்போதே விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் பொருளாதார மந்தமான சூழல் நிலவி வருகிறது. இதனை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த சூழலில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து 1 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளது மத்திய அரசு.
இதனை விமர்சித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தாங்களாக ஏற்படுத்திய பொருளாதார பேரழிவை எவ்வாறு சமாளிப்பது என தெரியாமல் திணறி வருகின்றனர். ரிசர்வ் வங்கியிலிருந்து பணத்தைத் திருடுவது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது. இது துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டவருக்கு மெடிக்கல் ஷாப்பிலிருந்து பேன்ட்-எய்டை திருடி ஒட்டுவது போன்றதாகும் என்றார் காட்டமாக.