இந்தியா
பாஜகவும், ஆர்எஸ்எஸும் என்னை மிரட்டுகிறது: ராகுல் காந்தி பாய்ச்சல்!
பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் என்னை மிரட்டுவதற்காகவும், என்னை துன்புறுத்துவதற்காகவும் என் மீது வழக்குகளை போடுகிறது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனால் கடுமையான விரக்தியில் இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கு தானே பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். உடனடியாக கட்சிக்கு மாற்று தலைமையை தேர்ந்தெடுங்கள் என தொடர்ந்து அழுத்தமும் கொடுத்து வருகிறார் ராகுல் காந்தி.
இந்நிலையில் ராகுல் காந்தி தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் ஆஜராகி வருகிறார். பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது. அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என ராகுல் காந்தி பேசியதற்காக அவர் மீது மும்பை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரை ஜாமீனில் விடுதலை செய்தது நீதிமன்றம்.
இந்நிலையில் இன்று பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு அவதூறு வழக்கில் ஆஜராகிறார். அனைத்து திருடர்களின் பெயருக்கு பின்னாலும் மோடி என்று ஏன் பெயரிடப்பட்டிருக்கிறது என்று ராகுல் பேசியதற்கு எதிராக அவர் மீது பாட்னா நீதிமன்றத்தில் பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வழக்குத் தொடர்ந்தார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி, என்னை இடையூறு செய்வதற்கும், மிரட்டுவதற்காகவும், துன்புறுத்துவதற்காகவும் ஆர்.எஸ்.எஸும் பாஜகவும் வழக்குகள் போடுகின்றன. மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகிறேன். வாய்மையே வெல்லும் என பதிவிட்டுள்ளார்.