இந்தியா
‘சீறி வர்றோம்… பாய்ந்து வர்றோம்..!’- பொங்கலுக்கு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராகுல் காந்தி, இன்று அவனியாபுரத்துக்கு வந்து பொங்கல் கொண்டாட உள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிட உள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்களுடன் பொங்கல் வைத்து, கொண்டாட்டங்களில் ஈடுபட இருக்கிறார். இதனால் காங்கிரஸார்கள் படு உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ராகுல் காந்தி, ‘சீறி வர்றோம்.. பாய்ந்து வர்றோம்… துள்ளி வர்றோம்… தமிழர் திருநாளை கொண்டாட தமிழகம் வருகிறேன்’ என்று கூறி சிறப்பு காணொலியைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் இன்று ‘துக்ளக்’ இதழின் ஆண்டு விழாவைக் கொண்டாட பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, சென்னை வருகிறார். அவர் துக்ளக் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்ற உள்ளார். இன்று அவர் உடல்நல பாதிப்படைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்திப்பார் என்றும் தெரிகிறது.
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன்.
Coming to celebrate Pongal with you in Madurai, Tamil Nadu. pic.twitter.com/CSUpyUHJaR
— Rahul Gandhi (@RahulGandhi) January 14, 2021
பாஜக – அதிமுக கூட்டணியில் தொடர்ந்து உரசல் போக்கு நீடித்து வரும் நிலையில், அதை சரி செய்யும் வேளையில் நட்டா ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக மாநில பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு, தேர்தலுக்கான பணிகளை வேகப்படுத்துவார் என்று தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் இரு பெரும் தேசியக் கட்சிகளின் இரண்டு முக்கியத் தலைவர்கள் இன்று தமிழகம் வர உள்ளதால், தமிழக அரசியல் களம் பரபரப்படைந்து உள்ளது. குறிப்பாக யாருக்கு மிகப் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்படும் என்பதில் இரு கட்சியினர் இடையிலும் கடும் போட்டி நிலவும் எனப்படுகிறது.