இந்தியா
கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் தட்டுப்பாடு; இந்த நேரத்தில் ஏற்றுமதி தேவையா..?- ராகுல் சரமாரி கேள்வி
நாட்டில் கொரோடா தொற்றுப் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என குரல்கள் எழுந்து வருகின்றன. அதே நேரத்தில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி தேவை தானா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகின்றது. இப்படியான சூழலில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக சில அரசியல் கட்சி தரப்புகள், நாட்டில் 18 வயது கடந்த அனைவருக்கும் கொரோடா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. இதை ஏற்க மறுத்து கருத்து தெரிவித்துள்ளது அரசு. இது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
நாட்டில் போதுமான அளவு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இருப்பில் இல்லை என்பது தான் மத்திய அரசின் இந்த அதிர்ச்சி முடிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் பல கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து இந்தியாவில் இருந்து ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது. இப்படி நாட்டு மக்களுக்கு இல்லாமல் ஏன் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில் ராகுல், ‘கொரோனா காலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவது என்பது தீவிரமான பிரச்சினை. இதை கொண்டாட்டமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மாநிலங்களுக்கு இடையே எந்தவிதமான பேதமும் பார்க்காமல், வேறுபாடு காட்டாமல், கொரோனா தடுப்பூசியை போதுமான அளவில் வழங்கி மத்திய அரசு உதவ வேண்டும்.
நான் கேட்கிறேன், கொரோனா பரவலால் நம்நாட்டு மக்கள் உயிர்பயத்தால் அச்சத்துடன் இருக்கும்போது, தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது என்பது சரியான நடைமுறையா. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடி அதைத் தோற்கடிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.