இந்தியா
வயநாட்டில் வேட்டி, சட்டையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த ராகுல் காந்தி!
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. முதன்முறையாக தென்னிந்தியாவை சேர்ந்த மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக இந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வழக்கமாக அவர் போட்டியிடும் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியிலும் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் இந்த முறை ராகுல் போட்டியிடுகிறார். அவர் தென்னிந்தியாவை சேர்ந்த ஒரு தொகுதியில் போட்டியிடுவது இதுவே முதல்முறை.
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததால் அங்கு அதிக அளவு தொண்டர்கள் கூடியிருந்தனர். 11 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் கல்பெட்டா பகுதிக்கு தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் வந்தார் ராகுல் காந்தி. அதன் பின்னர் தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக திறந்த வாகனத்தில் வந்து தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. அப்போது அவர் கேரளா மற்றும் தமிழகத்தின் பாரம்பரிய ஆடையான வேட்டி சட்டையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.