இந்தியா
மோடியை கலாய்த்த ராகுல்: உலக நாடக தின வாழ்த்து!
மிஷன் சக்தி சோதனை வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்து அவரை கலாய்த்துள்ளார்.
பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். அப்போது முக்கியமான அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட உள்ளார் என்ற செய்தி ஊடகங்கள் மூலம் தெரியவந்தது. இதனையடுத்து ஒட்டுமொத்த நாட்டு மக்களும் உஷாரானார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சிலர் ஏடிஎம் நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.
இப்படித்தான் கடந்த 2016-இல் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். எனவே இந்தமுறையும் அதுபோன்ற முக்கியமான அறிவிப்பு வெளியாகலாம் என சாமானிய மக்கள் அஞ்சினர். ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் அதுபோன்ற அறிவிப்புக்கு வாய்ப்பில்லை என சிலர் முன்னரே கணித்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த பின்னர் எந்த பிரதமரும் இதுவரை நாட்டு மக்களிடையே உரையாற்றியது இல்லை என்பதால், இந்தமுறை மோடியின் உரை என்னவாக இருக்கும் என யூகிக்க முடியவில்லை. இதனையடுத்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி மிஷன் சக்தி சோதனை வெற்றி குறித்து பேசினார். விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது என பெருமிதம் கொண்டார்.
இந்நிலையில் இதனை நிகழ்த்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புக்கு பாராட்டை தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு உலக நாடக தின வாழ்த்து என கூறி அவரை கலாய்த்துள்ளார். இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் இதே பாணியில் கலாய்த்து வருகின்றனர்.