இந்தியா
குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததுக்கு ராகுல் காந்திதான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு!
கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதனால் கர்நாடக அரசு கவிழ்ந்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் காரணம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில தினங்களாக கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் இழுத்தடித்து வந்த குமாரசாமி அரசு ஒருவழியாக நேற்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது. அதில் மொத்தம் பதிவாகிய 204 வாக்குகளில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து கர்நாடக அரசு கவிழ்ந்தது.
குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையடுத்து குமாரசாமி ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனையடுத்து அடுத்த அரசு பதவியேற்கும் வரை முதலமைச்சராக தொடரும்படி குமாரசாமிக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் அடுத்த முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவியேற்பார். அவர் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் வஜுபாய் வாலாவை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு, ராகுல் காந்தியின் அணுகுமுறையே காரணம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.