இந்தியா
ராகுல் காந்தி நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கிறார்… சிறுபிள்ளைத்தனமானது: மத்திய அமைச்சர் விளாசல்!
![Rahul 5 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/04/Rahul-5.jpg)
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து அவர் எம்.பி பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளார். இதனை சிறுபிள்ளைத்தனமானது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார்.
![Kiran-Rijiju - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/04/Kiran-Rijiju-1024x683.jpg)
இந்த வழக்கின் தீர்ப்பில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் ஆபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவருக்கு ஜாமீன் வழங்கி, 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அவரது தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ராகுல்காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து இன்று ராகுல் காந்தி குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேரில் சென்று மேல்முறையீடு செய்ய உள்ளார்.
இந்த நிலையில், இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரீஜிஜூ தெரிவித்தபோது, மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி சூரத் செல்வது தேவையில்லாத நாடகம். மேல்முறையீடு செய்வதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் செல்ல வேண்டியம் அவசியம் இல்லை. பொதுவாக, எந்தவொரு குற்றவாளியும் தனிப்பட்ட முறையில் செல்வதில்லை. ராகுல் காந்தி செய்யும் மேல்முறையீடு நீதிமன்றத்தில் அழுத்தம் கொடுக்கும் சிறுபிள்ளைத்தனமான முயற்சியாகும் என்றார்.