இந்தியா
ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன்: குண்டு வீசும் சுப்பிரமணியன் சுவாமி!
![Rahul Gandhi - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/04/Rahul-Gandhi.jpg)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை தொடர்பான விவகாரம் தற்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அவருக்கு இரட்டை குடியுரிமை இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் உள்துறை அமைச்சகம் ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்திலும் குடியுரிமை உள்ளதாக பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2003-ஆம் ஆண்டு பேக்ஆப்ஸ் என்ற பெயரில் இங்கிலாந்தில் ஒரு நிறுவனத்தின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 51, சவுத்கேட் தெரு, வின்செஸ்டர் என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்த நிறுவத்தின் இயக்குனர் மற்றும் செயலாளர்களில் ராகுல் காந்தியும் ஒருவர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து உள்துறை அமைச்சகத்தின் குடியுரிமைப் பிரிவு இயக்குனர் பி.சி.ஜோஷி, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சுப்பிரமணியன் சுவாமியின் புகாரையும் குறிப்பிட்டு, பேக்ஆப்ஸ் நிறுவனம் 10.10.2005 மற்றும் 31.10.2006 ஆகிய ஆண்டுகளில் தாக்கல் செய்த வருடாந்திர வருமான வரி தாக்கல் விண்ணப்பத்தில் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், 17.02.2009 அன்று அந்த நிறுவனத்தைக் கலைப்பதற்காக அளிக்கப்பட்ட விண்ணப்பத்திலும் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்றே குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் இதுகுறித்த உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்திக்கு அந்த நோட்டீஸில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.