இந்தியா
காஷ்மீருக்குள் நுழையவிடாமல் ராகுல் காந்தியை திருப்பி அனுப்பியது அரசு!
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பின்னர் அங்கு நிலைமை மோசமானது. முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு நிலைமை சீராகி விட்டதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் களநிலவரம் எப்படி இருக்கிறது என்பதை நேரில் சென்று ஆய்வு செய்ய ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்கட்சி தலைவர்கள் யாரும் வரவேண்டாம், அரசியல் கட்சியினர் வந்தால், அது ஏற்கனவே உள்ள அமைதியையும், இயல்பு நிலையையும் சீர் குலைக்கும் என்று காஷ்மீர் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் திட்டமிட்டபடி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, திமுக எம்பி திருச்சி சிவா, பீகார் முன்னாள் முதல்வர் சரத் யாதவ் உள்ளிட்ட 12 பேர் இன்று காலை 12 மணியளவில் ஸ்ரீநகர் சென்றனர். இதனால், ஸ்ரீநகர் விமானநிலையத்தில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். காஷ்மீருக்குள் நுழைய அனுமதி இல்லை என்று கூறி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை வெளியே விடாமல் தடுத்தனர். சுமார் 2 மணி நேரம் விமான நிலையத்திலேயே காத்திருந்த தலைவர்கள் மீண்டும் டெல்லிக்கே திரும்பினர்.