கிரிக்கெட்
உடற்தகுதியில் தேறிய ரோகித்… ஆஸி., டெஸ்ட் தொடரில் விளையாடுகிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா, காயம் காரணமாக தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் தொடரில் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரை முடித்துள்ள நிலையில், இன்னும் டெஸ்ட் தொடர் மட்டுமே பாக்கியுள்ளது.
வரும் 17 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகிறது. இந்தப் போட்டியை முடித்துக் கொண்டு, இந்தியா திரும்புகிறார் கேப்டன் விராட் கோலி. மனைவி அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கும் நிலையில், இம்மாதம் குழந்தை பிறக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே குழந்தை பிறக்கும் நேரத்தில் மனைவியுடன் இருக்க ஏதுவாக கோலி, இந்தியா வருகிறார். அவர் இல்லாமல்தான் அடுத்த 3 போட்டிகளை இந்தியா விளையாட இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் போது ரோகித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதனால், அவர் ஆஸ்திரேலிய தொடரில் இதுவரை விளையாடாமல் இருந்து வருகிறார். தற்போது உடற்தகுதியில் தேறிவிட்ட காரணத்தினால், அவர் உடனடியாக ஆஸ்திரேலியா புறப்படுவார் எனத் தெரிகிறது. அங்கு செல்லும் ரோகித், குவாரன்டீன் காலத்தை முடித்துவிட்டு கடைசி இரண்டு போட்டிகளில் மட்டும் பங்கேற்பார் எனத் தகவல்.