சினிமா
ஜெய்பீம் பார்வதி அம்மாவை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ்…
![ragava - Bhoomitoday ragava](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/ragava.jpg)
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘ஜெய்பீம்’ திரைப்படம் உண்மை கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. போலீசாரால் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணு என்பவரின் உண்மை கதை ஆகும்.
இந்த நிலையில் ராசாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாள் இன்றும் உயிருடன் இருக்கும் நிலையில் அவரை பல பத்திரிகை பிரபலங்கள் பேட்டி எடுத்து வருகின்றனர். அவ்வாறு ஒரு ஊடகத்தின் பேட்டியின் மூலம் ராசாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாள் வறுமையில் இருப்பதை அறிந்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் பார்வதி அம்மாளுக்கு உதவ முன் வந்தார்.
பார்வதி அம்மாள் அவர்களின் தற்போதைய நிலையை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்ததாகவும் அவருக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டி கொடுப்பதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரை சந்திக்க விரும்பிய அவர் பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனல் உதவியுடன் பார்வதி அம்மாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போதே அவருக்கு ரூ1 லட்சத்திற்கான காசோலையை அவர் வழங்கினார். பார்வதி அம்மாவுக்கு அரியலூரில் இடம் உள்ளது. எனவே, அங்கு வீடு கட்டிதர முடிவெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பூமி பூஜை நடக்கும் எனவும் அப்போது நேரில் வருவேன் என அவர் பார்வதி அம்மாவிடம் வாக்குறுதி அளித்தார். அதோடு, போலீசாரின் தாக்குதலில் மனம்நலம் பாதிக்கப்பட்டுள்ள பார்வதி அம்மாவின் மூத்த மகனின் மனைவி மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கும் ரூ.2 லட்சம் கொடுப்பதாக கூறியுள்ளார்.