டிவி

சித்தி-2 சீரியலில் இருந்து விலகும் ராதிகா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published

on

சின்னத்திரை உலகின் முடிசூடா ராணியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராதிகா. 1999 ஆம் ஆண்டு வெளியான ‘சித்தி’ நாடகம் மூலம், அவர் புகழின் உச்சிக்கே சென்றார். மிகவும் எதார்த்தமான காட்சி அமைப்புகள், வலுவான கதைக் களம், திறமை வாய்ந்த நடிகர்களை வைத்து பெரும் பொருட் செலவில் 1999 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி சீரியல் இன்றளவும் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஷோ.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அதே பெயரில் வெளியிடப்பட்ட சீக்வல் நாடகம் தான் ‘சித்தி-2’. 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பைத் தொடங்கிய இந்த நாடகத்திலும் சித்தியாக மெயின் ரோலில் அசத்தியது ராதிகா தான். மொத்த நாடகத்துக்கும் அவர் தான் அச்சாணியாக இருந்தார். சித்தி சீரியலைப் போலவே சித்தி-2 சீரியலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நாடகம் இன்னும் பாதி கட்டத்தைக் கூட எட்டாத நிலையில் ராதிகா அதிர்ச்சிகர முடிவு ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது சித்தி-2 சீலியலில் இருந்து தான் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து ராதிகா, ‘சித்தி-2 சீரியலில் இருந்து விலகுவதால் மகிழ்ச்சியும் வருத்தமும் ஒரு சேரப் பெற்றுள்ளேன். இப்போதைக்கு சித்தி-2 மற்றும் அனைத்து மெகா சீரியல்களில் இருந்தும் விலகியிருக்க முடிவெடுத்துள்ளேன். எனது மிகச் சிறந்த கடின உழைப்பை சன் டிவியில் நாடகம் நடிக்கும் போது தான் கொடுத்துள்ளேன். எனவே, என்னுடன் இந்தப் பயணத்தில் கூடவே வந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சக நடிகர்களைப் பிரிந்து செல்வது வருத்தமாக உள்ளது. என்ன இருந்தாலும் நாடகம் தொடர்ந்து நடந்தாக வேண்டும் அல்லவா. அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.

எனது அனைத்து ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு அன்பும் நன்றியும். என் மீது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் பொழிந்த அன்புக்கும் விசுவாசத்துக்கும் மிக்க நன்றி. சித்தி-2 சீரியலைத் தொடர்ந்து பாருங்கள். எனது சிறந்த பணி இனிமேல் தான் வர உள்ளது’ என்று கூறியுள்ளார்.

ராதிகாவின் முடிவால் டிவி சீரியல் ரசிகர்கள் மனம் உடைந்து, தங்கள் ஆதங்கங்களை சமூக வலைதளங்களில் கொட்டி வருகின்றனர்.

 

 

Trending

Exit mobile version