சினிமா
நயன்தாராவிடம் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்; திமுகவில் இருந்து நானே விலகிக்கொள்கிறேன்: ராதாரவி உருக்கம்!
![Radharavi and Nayanthara - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/03/Radharavi-and-Nayanthara.jpg)
நடிகர் ராதாரவி நயன்தாரா குறித்து பேசியது சர்ச்சையாக வெடிக்க பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. இந்நிலையில் ராதாரவி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கொலையுதிர் காலம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா இன்னைக்கு ஒரு ஸ்டார். புரட்சித் தலைவர், ரஜினி படத்தோட நயன்தாரா படத்தை ஒப்பிடாதீர்கள். அவர்களெல்லாம் லெஜண்ட்ஸ். நயன்தாரா ஒரு நல்ல நடிகை. சினிமாவில இவ்ளோ நாள் இருக்கிறதே பெரிய விஷயம். நயன்தாராவை பற்றி வராத செய்தியே இல்லை.
நயன்தாரா, பேயாகவும் நடிக்கிறாங்க. அந்தப் பக்கம் சீதாவாகவும் நடிக்கிறாங்க. முன்பெல்லாம் சாமி வேஷம் போடறதுன்னா கே.ஆர்.விஜயாவைத்தான் தேடுவாங்க. ஆனால், இப்பல்லாம் யாரு வேணும்னாலும் போடலாம் சாமி வேஷம். இன்று, பார்த்தவுடன் கும்பிட தோன்றுபவர்களும் சாமி வேஷம் போடலாம். பார்த்தவுடன் கூப்பிட தோன்றுபவர்களும் சாமி வேஷம் போடலாம் என கொச்சையாக பேசினார்.
ராதாரவியின் இந்த சர்ச்சை பேச்சுக்கு திரைத்துறை என பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. இது பூதாகரமாக வெடிக்க அவரை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கினார் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நடிகை நயன்தாரா, நடிகர் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்தார். அவரது அறிக்கை ராதாரவிக்கு எதிராக ஆவேசமாக இருந்தது.
இந்நிலையில் தனது சர்ச்சை கருத்துக்கு ராதாரவி வருத்தம் தெரிவித்துள்ளார். நான் நயன்தாராவை இழிவாக பேசவில்லை. அவரை பாராட்டித்தான் பேசினேன். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. இதற்காக நயன்தாரா வருத்தப்பட்டார் என்று சொன்னார்கள். நானும் வருந்துகிறேன்.
அப்படி பேசியதற்காக நயன்தாராவிடம் எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நான் யாரையும் புண்படுத்தி பேசியது இல்லை. நயன்தாரா குறித்த எனது பேச்சு திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற காரணத்தினால் நானே திமுகவில் இருந்து விலகிக்கொள்கிறேன் என கூறியுள்ளார் ராதாரவி.